தமிழ்நாடு
மாநிலங்களவையில் வைகோவின் பேச்சை கை தட்டி ஆரவாரம் செய்து வரவேற்ற கேரள எம்பிக்கள்!
![Vaiko 44 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/Vaiko-44-2.jpg)
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தினால் நாகசாகி, ஹிரோஷிமா போல எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு தமிழகம் உள்ளாகும் பேராபத்து உள்ளதாகவும், மேலும் இதனால் அருகில் உள்ள அணைகள் உடையும் ஆபத்து உள்ளதாகவும் மதிமுக எம்பி வைகோ மாநிலங்களவையில் பேசியதற்கு கேரள எம்பிக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் இதனை கடந்த 11-ஆம் தேதி தெரிவித்தார்.
இந்த பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதினால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும் என தேனி சுற்றுவட்டார பகுதியினரும், அரசியல் கட்சிகளும், சூழலியல் அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றன. இதனை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நியூட்ரினோ திட்டத்தால் இங்கே சுரங்கம் தோண்டும் போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை குடைய உள்ளனர். மலையை குடைய சுமார் 1200 டன் டைனமைட் வெடிப் பொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மலையை குடைய டைனமைட் வைக்கும் போது அருகே 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடுக்கி அணை உடையும். முல்லைப் பெரியாறு அணையும் உடையும்.
மலையை குடைந்து சுமார் 11 லட்சம் டன் பாறைகளை அகற்ற உள்ளனர். இதனால் மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழலே சீர்கெடும் என்று தெரிவித்தார். வைகோவின் இந்த பேச்சை ரசித்து கேட்ட கேரள எம்பிக்கள் கை தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.