இந்தியா
நெஞ்சு பதபதைக்கும்: ஒரு கிராமமே மண்ணுக்குள் புதைந்த இயற்கையின் கோரத்தாண்டவம்!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்த மாநிலமே வெள்ளத்தில் மிதந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அங்கு 80 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதில், நிலம்பூர் அருகே உள்ள பூதானம், கவலப்பாரா என்ற இரண்டு கிராமங்கள் முழுவதும் நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்துள்ளது. இதில் கவலப்பாரா கிராமத்தில் உள்ள 36 வீடுகளும் மண்ணுக்குள் புதைந்துள்ளது. இதுவரை 2 குழந்தைகள் உள்பட 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 41 பேர் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பூதானம் கிராமத்தின் பலி எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த இரண்டு கிராமங்களும் மண்ணில் புதைந்துள்ளது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.