தமிழ்நாடு
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.25 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் சற்றுமுன்னர் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளிவந்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் அந்த வகையில் சற்று முன்னர் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நேற்று முன்தினம் அங்கு தேர்தல் முடிவடைந்ததை அடுத்து அவர் தனது வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு சோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பினரயி விஜயன் அவர்கள் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கேரள முதல்வருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவல் அம்மாநில மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.