தமிழ்நாடு
கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் வெறும் விருப்ப பாடம்தானா? சரமாரி கேள்விகளைக் கேட்ட நீதிமன்றம்!
கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கக் கோரும் வழக்கை உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மொழியைக் கட்டாயமாக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த பொன்குமார் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்து இருந்தார்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கேந்திர வித்தியாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. சமீபத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் தமிழ் கற்றுத்தரப்படாது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு வகுப்பில் 20 மாணவர்களுக்குத் தமிழ் படிக்க விருப்பம் இருந்தால் அவர்களுக்கு மட்டும் கற்றுத்தரப்படும். இதற்கான ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு எடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது ஏற்புடையது அல்ல. கேந்திர வித்தியாலயா கல்வி நிறுவனம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்குக் கீழ் தான் வருகிறது, மேலும் தமிழகத்தில் உள்ள தமிழ் கற்றல் ஆகிய விதிகளுக்கு எதிராக இது உள்ளது. தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் 50 சதவீதம் தமிழ் மாணவர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் தமிழ் புறக்கணிக்கப்படுவது ஏற்படையது அல்ல. எனவே கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக இருக்க வேண்டும் என்றும், தமிழ் ஆசியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற கிளை மதுரை பிரிவில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கானது நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் 2006-ம் ஆண்டு கல்வி சட்டத்தின் கீழ் 1 முதல் 10 வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ் கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் விருப்ப பாடமாக அறிவித்தது எப்படி என்று மனுதாரர் தரப்பிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டது.
கேந்திரிய வித்தியாலயா பள்ளி சார்பில் வாதாடிய வழக்கறிஞர், மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதற்காகதான் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு படிக்கும் மாணவர்களிள் 50 சதவீதத்தினர் வெளிமாநிலத்திலிருந்து இங்கு வந்து படிக்கும் மாணவர்களாக உள்ளனர். எனவே தமிழ் விருப்ப பாடமாகக் கற்பிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பிரெஞ்ச், ஜெர்மன், பெங்காலி உள்ளிட்ட மொழிகளை கற்கலாம். ஆனால் தமிழகத்தில் தமிழ் மொழியைக் கற்கக் கூடாதா? என கேள்வி எழுப்பினர். இது போன்ற வாதங்களை நாங்கள் ஏற்கமாட்டோம். பிரதமர் தாய் மொழியில் கற்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். ஆனால் நீங்கள் இந்தி, ஆங்கிலத்தை மற்றும் கற்றுக்கொடுப்பது ஏன்? கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் தமிழ் விருப்ப பாடமாக உள்ளது என்று கூறுவதை ஏற்க முடியாது. தமிழ் மொழி மட்டும் என நாங்கள் கேட்கவில்லை. அனைத்து பிராந்திய மொழிகளுக்காகவும் சேர்த்துத்தான் கேட்கிறோம். இப்படியே சென்றால் தமிழ் மொழி தெரிந்திருந்தால் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் இடம் இல்லை என்ற நிலை கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
தாய் மொழியில் கற்கும் சீனா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் நல்ல முன்னேற்றத்தில் உள்ளன. வழக்கு குறித்த விரிவான தீர்ப்பை வழங்க, நாளை மீண்டும் வழக்கு விசாரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.