இந்தியா
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்; 44 வீரர்கள் பலி: நாடே சோகத்தில் மூழ்கியது!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதற்கு பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர். இதனையடுத்து தீவிரவாதிகளுக்கும், நமது எல்லை பாதுகப்புபடை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்தது.
இந்த தாக்குதலில் நமது வீரர் ஒருவர் பலியானார். அதே நேரத்தில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் 300 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை காரில் நிரப்பி வந்த தீவிரவாதி ஒருவன் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருந்த வாகனத்தின் மீது மோதச்செய்து தாக்குதல் நடத்தினான். இதில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த துயரச்சம்பவம் புல்வாமா-ஜம்மு நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதலால் பல வீரர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாகப் பொறுப்பேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தாக்குதலுக்கு எங்கள் நாடு எந்தவிதத்திலும் காரணமல்ல என பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.
தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உபி முதல்வர் யோகி, இலங்கை, ரஷ்யா, பூட்டான், மாலத்தீவு உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.