தமிழ்நாடு
சௌகிதார்களிடம் பயிற்சி பெற்ற கூர்கா: அதிமுக, பாஜகவை கலாய்க்கும் கரு.பழனியப்பன்!
சென்னை மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்கு வீதியில் இறங்கி அலைகின்றனர். ஆனால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை எனவும், இது எதிர்கட்சிகள் பரப்பும் வதந்தி எனவும் கூறியுள்ளார் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இதனை இயக்குநர் கரு.பழனியப்பன் கலாய்த்துள்ளார்.
சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடித்துள்ள கூர்கா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் கரு.பழனியப்பன் பேசும்போது, இன்று காலை அனைத்து செய்திதாள்களிலும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதுதான் தலைப்புச் செய்தியாக வந்தது.
அந்த செய்திக்கு கீழேயே தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க முதல்வர் அவசர ஆலோசனைக் கூட்டம் என்ற செய்தி இருந்தது. அதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொள்கிறார் என்றும் இருந்தது. இவர்கள் எல்லாம் சௌகிதார்களிடம் பயிற்சி பெற்றவர்கள். கடந்த 5 ஆண்டுகளாக சௌகிதார்கள் நம்மை மகிழ்வித்துக் கொண்டே இருந்தார்கள். அதே போல் இந்த கூர்காவும் நம்மை மகிழ்விப்பார். இன்னுமொரு 5 ஆண்டுகள் சவுக்கிதார்கள் நம்மை மகிழ்விக்கப் போகிறார்கள் என கலாய்த்தார்.