தமிழ்நாடு
“சினிமா பன்ச் டயலாக்கா அரசியல்?”- ரஜினி மீது சீறிய கார்த்தி சிதம்பரம்
வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சித் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ரஜினியின் அறிவிப்பைப் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், ரஜினியின் அரசியல் வருகையை விமர்சித்துப் பேசியுள்ளார்.
‘ரஜினியோ, அல்லது வேறு சினிமா நடிகர்களோ அரசியலுக்கு வருவதை நான் எந்த விதத்திலும் எதிர்க்கவில்லை. எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அரசியலுக்கு வர வேண்டும் என்று முடிவெடுத்தப் பின்னர், பொதுத் தளத்தில் அவர்கள் என்ன வேலை செய்துள்ளார்கள் என்பதை நான் பார்ப்பேன்.
மக்களைச் சந்திக்க வேண்டும், பொது விஷயங்களில் தங்களது நிலைப்பாட்டை அவர்கள் சொல்ல வேண்டும். தொடர்ந்து களப்பணியாற்ற வேண்டும். இதை எதையும் செய்யாமல், சினிமா எடுப்பது போல அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்த முடியாது. குறிப்பாக அரசியல் ஒன்றும் சினிமாவில் பேசப்படும் ஒன்லைனரோ பன்ச் டயலாக்கோ அல்ல. இது முற்றிலும் வேறு வகையான விஷயம்.
இது குறித்து ரஜினிக்குத் தெரிந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அவர் ஒரு முழு நேர அரசியல்வாதி போலவோ, அரசியலை மிக கவனமாக செய்யக்கூடியவர் போலவோ எனக்குத் தெரியவில்லை’ என்று வெளுத்து வாங்கியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.