இந்தியா
ஹிஜாப்-காவி விவகாரம்: பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் மற்றும் காவி விவகாரம் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ள நிலையில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி இல்லை என்று கல்லூரி நிர்வாகிகள் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு போட்டியாக காவி உடை அணிந்த இந்து மாணவர்களும், நீல உடை அணிந்த தலித் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் பெரும் பிரச்சனை ஆகிறது என்பதும் மாணவர்கள் மத்தியில் மதம் என்ற விஷத்தை அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் ஹிஜாப் மற்றும் காவி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைதி சமய நல்லிணக்கத்தை பேணும் வகையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.