இந்தியா
திருமண மேடையிலேயே மயங்கி உயிரிழந்த மணப்பெண்: பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சியான முடிவு!
திருமணத்திற்கு முந்தைய நாள் வரவேற்பு நிகழ்ச்சியின் போது திடீரென மயங்கி உயிரிழந்த மணப்பெண்ணின் பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சியான முடிவு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் என்ற பகுதியை சேர்ந்த சைத்ரா என்ற 26 வயது பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இருதரப்பு பெற்றோர்களும் இந்த திருமணத்தை முடிவு செய்து பிப்ரவரி 6ஆம் தேதி திருமணம் நடத்தவும் அதற்கு முந்தையநாள் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் திட்ட மிட்டனர்
இந்த நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த போது கிராம மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது திடீரென மணமகள் சைத்ரா மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்
இதனால் அதிர்ச்சி அடைந்த சைத்ராவின் பெற்றோர்கள் மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து அவரது முக்கிய உறுப்புகள் எடுக்கப்பட்ட பின் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது
இந்த சோகமான நிகழ்வு குறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கூறிய போது சைத்ராவின் மரணம் உண்மையில் துரதிர்ஷ்டமானது, ஆனால் அதே நேரத்தில் அவரது பெற்றோர்கள் எடுத்த நெகிழ்ச்சியான முடிவு அனைவருக்கும் ஒரு முன்மாதிரி ஆனது என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது