இந்தியா
முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்: எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா விரைவில் ராஜினாமா செய்யப் போவதாக ஏற்கனவே தகவல் வெளிவந்த நிலையில் சற்று முன் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில் வயது மூப்பு காரணமாக எடியூரப்பா ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளிவந்தது. ஆனால் உண்மையில் எடியூரப்பாவுக்கும் பாஜக மேலிடத் தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு என்றும் அதனால் அவர் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
கடந்த 16ஆம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்தபோது, எடியூரப்பாவை ராஜினாமா செய்யச் சொல்லி பாஜக மேலிட தலைவர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சற்றுமுன் கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக ஆளுநரை இன்று பிற்பகல் சந்திக்க உள்ளதாகவும் அவரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளதாகவும் எடியூரப்பா தெரிவித்துள்ளது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதலமைச்சராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக மேலிட உத்தரவின் பேரில் கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் முதல்வர் பதவியைப் பிடிப்பதற்காக கர்நாடக மாநிலத்தில் உள்ள பாஜக பிரமுகர்கள் போட்டிபோட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.