தமிழ்நாடு
குமரி திருவள்ளுவர் சிலையை 5 மாதங்களுக்கு பார்க்க முடியாது: ஏன் தெரியுமா?
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை இன்னும் ஐந்து மாதங்களுக்கு சுற்றுலா பயணிகள் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு சிலை வைக்கப்பட்டது என்பதும் இந்த சிலையை பார்க்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் ரசாயன கலவை பூசும் பணி விரைவில் தொடங்கப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த பணி தொடங்கிவிட்டதாக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது என்றும் இறுதியாக 2017ஆம் ஆண்டு திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசப்பட்ட நிலையில் தற்போது சிலிகான் எனப்படும் ரசாயன கலவை பூசும் பணி இன்று தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
சிலையில் உள்ள வெடிப்புகளில் சுண்ணாம்பு கலவை பூசப்பட்டு அதன் பின்னர் காகிதக்கூழ் கொண்டு சிலையில் படித்து உள்ள உப்பு கரைசல் நீக்கப்பட்டு ரசாயன கலவை பூசப்படுகிறது. இதற்காக ஜெர்மனி நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சிலிக்கான் எனப்படும் ரசாயன கலவை பயன்படுத்தப்பட்ட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பராமரிப்பு பணி காரணமாக வருகிற நவம்பர் 2ஆம் தேதி முதல் ஐந்து மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.