தமிழ்நாடு

‘சரி, நாங்களே கட்சி ஆரம்பிச்சுகிறோம்..’ கடுப்பான நிர்வாகி! ரஜினி பெயரிலேயே கட்சி தொடக்கம்!!

Published

on

நடிகர் ரஜினிகாந்த கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்த நிலையில், அவரது மன்ற நிர்வாகி ஒருவர் ரஜினியின் பெயரிலேயே கட்சி தொடங்கியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணைச் செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ். ராஜன். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்த்த பல லட்ச ஆதரவாளர்களில் இவரும் ஒருவர். ஆனால், கட்சி தொடங்கப்போவதில்லை என்று ரஜினி கூறியதும், கடுப்பான ராஜன், ரஜினியின் பெயரிலேயே கட்சி தொடங்கியுள்ளார்.

இதுதொடர்பாக ஆர்.எஸ். ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘ரஜினிகாந்த் கட்சி தொடங்கி அரசியலில் இறங்கி தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வார் என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். ஆனால் அவரது அறிவிப்பு அனைத்து மக்களுக்கும், அவரை இன்னும் உயிருக்கு உயிராய் நேசிக்கும் ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அரசியலுக்கு வராததற்கு அவர் அளித்த உருக்கமான விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனாலும் எங்களுடைய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தந்தது. வலியை தந்துள்ளது. ரஜினிகாந்தின் படம் ஒரு தீபாவளியன்று ரிலீஸ் ஆகாவிட்டாலே அதை கருப்பு தீபாவளி என்று நாங்கள் கொண்டாடமாட்டோம்.

இப்படியான சூழலில் அரசியல் வருகையை எதிர்பார்த்து ஏமாந்து இருப்பதை எப்படி கையாள்வது? என்பது தெரியவில்லை. ரசிகர்கள் மட்டுமன்றி மக்கள் அனைவருக்கும் இது பெரிய ஏமாற்றம். ரஜினிகாந்த் கட்சி தொடங்காத நிலையில் நாங்களே கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து புதிய கட்சி தொடங்கியுள்ளோம்.

அனைத்து இந்திய ரஜினி மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி, அரசியலில் குதித்து மக்கள் சேவைகள் செய்ய முடிவு செய்துள்ளோம். கட்சி கொடி, சின்னம், கொள்கை தொடர்புடைய மற்ற விஷயங்கள் பற்றி மக்கள் மற்றும் ரசிகர்களிடம் கருத்துக்கேட்டு, கன்னியாகுமரியில் வைத்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவோம்’. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version