சினிமா செய்திகள்
பிரபல சின்னத்திரை நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை: கடிதத்தில் அதிர்ச்சி காரணம்!
பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் தற்கொலைக்கு முன் எழுதி வைத்த கடிதத்தில் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகை செளஜன்யா. இவர் பெங்களூரில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். நடிகை செளஜன்யா தற்கொலை செய்து கொண்டதை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ஜன்னல் மூலம் பார்த்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
காவல்துறையினர் கதவை உடைத்து தற்கொலை செய்துகொண்ட நடிகை செளஜன்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலைக்கு முன் அவர் தனது காலில் பச்சை குத்தி இருந்ததையும் போலீசார் கவனித்துள்ளனர்.
நடிகை செளஜன்யா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் தனது தற்கொலை முடிவுக்கு யாரையும் குற்றம் சாட்டவில்லை என்றும், தனது தற்கொலைக்கு தான் மட்டுமே பொறுப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனது பெற்றோர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும், தனக்கு எந்த உடல்நல பிரச்சனை எதுவும் இல்லை என்றும், தான் வாழ்க்கையில் எதிர்கொண்ட பல தோல்விகள் மனதளவில் தன்னை பாதித்ததாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை செளஜன்யா வாழ்க்கையில் அப்படி என்ன பிரச்சனைகளை சந்தித்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவருடன் தொலைக்காட்சி தொடரில் நடித்தவர்கள் மற்றும் பணிபுரிபவர்களிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை செளஜன்யாவின் தற்கொலை கன்னட சின்னத்திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.