தமிழ்நாடு

‘நீ தொட்டுப் பாரு தம்பி..!’- அண்ணாமலையின் அடாவடிப் பேச்சுக்கு கனிமொழியின் பதிலடி

Published

on

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சித் தொகுதியில் பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர் முதல் முறையாக தேர்தல் களம் காண்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் கரூர் மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான செந்தில் பாலாஜி, கரூர் தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அண்ணாமலை, ‘செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதிச்சா பல்லெல்லாம் வெளிய வந்திடும். நீயெல்லாம் ஒரு ஆளு. இங்க இருக்கிற திமுககாரனுக்கு நான் ஒரு எச்சரிக்கை வைக்கிறேன்.

நான் அகிம்சைவாதியாக அரிசயல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அது கர்நாடக முகம். அத காட்ட வேண்டாம்னு நினைக்கிறேன். இது குறித்து வீடியோ எடுத்து எலெக்‌ஷன் கமிஷனுக்கு கொடுத்தாலும் கவலையில்ல’ என்று பகிரங்கமாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு திமுக மகளிர் அணித் தலைவர் கனிமொழி, ‘அண்ணாமலை தேர்தல் களத்தில் திமுக வேட்பாளருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கிறார். திமுகவினர் மீது, திமுக உடன்பிறப்பு மீது நீ கை வச்சிப் பாரு தம்பி. நாங்க எழுந்து நின்னா நீங்க தாங்க மாட்டீங்க’ என்று எச்சரிக்கை விடுத்து பதிலடி கொடுத்துள்ளார்.

Trending

Exit mobile version