தமிழ்நாடு
சரியான நபர் தவறான கட்சியில் இருக்கிறார்: தம்பிதுரையை பாராட்டிய கனிமொழி!
![Kanimozhi and Thambidurai - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/02/Kanimozhi-and-Thambidurai.jpg)
மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை சமீப காலமாக பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார். அதே போன்று சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டையும் விமர்சித்துள்ளார் அவர். இதற்கு திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பாராட்டியுள்ளார்.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடர்பாக மறைமுகமாக பேசி வருகிறது என கூறப்பட்டாலும் அதிமுக பாஜக கூட்டணி அமையாது என தொடர்ந்து பேசி வருபவர் தம்பிதுரை. பட்ஜெட்டை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றிருந்த நிலையில், பட்ஜெட்டில் தமிழகத்திற்கான அறிவிப்புகள் இல்லையென தம்பிதுரை விமர்சித்திருந்தார்.
பாஜக தாக்கல் செய்த 5 பட்ஜெட்களிலும் தமிழகத்திற்கு எந்த நலனும் கிடைக்கவில்லை. தமிழகத்திற்கு வர வேண்டிய நிலுவைத் தொகை குறித்து ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதும் கேட்டார். எடப்பாடி பழனிசாமியும் பலமுறை வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் இன்னும் வரவில்லை. ஜிஎஸ்டி வேண்டாம் என்று சொன்னோம், அதனை கொண்டுவந்தனர். ஜிஎஸ்டியில் வரவேண்டிய நிலுவைத் தொகையையும் இன்னும் தரவில்லை. கஜா புயலுக்கு கேட்ட நிவாரண நிதியும் இன்னும் வரவில்லை. தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும் பறிபோயுள்ளன என சரமாரியாக விமர்சித்தார் தம்பிதுரை.
இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி, சரியான நபர் தவறான கட்சியில் இருக்கிறார் என வாஜ்பாயைப் பற்றி கலைஞர் கூறியதுதான் என் நினைவுக்கு வருகிறது. தம்பிதுரை கூறுவதைத்தான் மத்திய அரசின் மீது திமுக தொடர்ந்து விமர்சனமாக வைத்துவருகிறது. இப்போதுதான் அதிமுகவிலிருந்து இதனை ஒருவர் புரிந்துகொண்டு பேசுகிறார். அவரோடு இருக்கும் மற்றவர்களுக்கும் விளங்க வைத்தால் நன்றாக இருக்கும் என்றார்.