சினிமா
ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் படப்பிடிப்பை முடித்த கங்கனா!
‘சந்திரமுகி2’ படத்தில் தனக்கான போர்ஷனை கங்கனா ரனாவத் முடித்துள்ளார்.
பி. வாசு இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஜோதிகா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘சந்திரமுகி’ திரைப்படம் கடந்த 2005-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. நடிகர்கள் ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார் உள்ளிட்டப் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தனக்கான போர்ஷனை முடித்துள்ளதாக கங்கனா தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் ராகவா லாரன்ஸூடன் படப்பிடிப்புத் தளத்தில் எடுத்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து அவர் தெரிவித்திருப்பதாவது, ‘இன்று ‘சந்திரமுகி2’ படத்தில் என்னுடைய போர்ஷனுக்கான படப்பிடிப்பு முடிவடைய இருக்கிறது. இந்தப் படப்பிடிப்பில் பல அற்புதமான மனிதர்களை சந்தித்து இருக்கிறேன். அவர்களை விட்டு பிரிகிறேன் என்பது எனக்குக் கடினமான விஷயமாக உள்ளது.
இதுவரை நான் ராகவா லாரன்ஸ் மாஸ்டருன் புகைப்படமே எடுத்தது இல்லை. ஏனெனில், பெரும்பாலும் நாங்கள் படத்தின் காஸ்ட்யூமிலேதான் இருப்போம். அதனால், இன்று படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டு பின்பு எடுத்துக் கொண்டேன். மாஸ்டர் என்னைப் பல வழிகளில் முன்மாதிரியாக இருந்துள்ளார்.
பின்னணி நடனக் கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் இன்று வெற்றிகரமான இயக்குநராக, நடனக்கலைஞராக, நடிகராக இது எல்லாவற்றையும் தாண்டி நல்ல மனிதராக வலம் வருகிறார். அவருடன் பணிபுரிந்தது எனக்குப் பெருமை’ என மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார் கங்கனா.