தமிழ்நாடு

கள்ள ஓட்டு போட்டதால் ஆவேசம்: சர்கார் விஜய் பாணியில் 49பி பிரிவில் ஓட்டு போட்ட பெண்!

Published

on

தனது ஓட்டை இன்னொருவர் கள்ள ஓட்டாக போட்டு விட்டதால் ஆவேசம் அடைந்த பெண் ஒருவர் ’சர்கார் விஜய்’ 49பி என்ற பிரிவில் ஓட்டு போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது, இந்த தேர்தலில் பொது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்காடிவாக்கம் என்ற கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவரது மனைவி பார்வதி அவர்கள் ஓட்டு போட வந்தார். இவரது வாக்காளர் அட்டை இன்னும் தனது கணவர் ஊருக்கு மாற்றப்படாத நிலையில் தான் பிறந்த ஊரான சிங்காடிவாக்கம் சென்று வாக்களிக்க வந்தார்.

அப்போது அவரது வாக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டு விட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பார்வதி தேர்தல் அலுவலகர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தன்னுடைய வாக்கை வேறு ஒருவர் கள்ளத்தனமாக செலுத்தி உள்ளதை எப்படி அனுமதிக்கலாம்? என்றும் ஆண் பெண் என்ற வித்தியாசம் கூட தெரியாமல் தேர்தல் அதிகாரிகள் பணிபுரிகிறார்களா? என்றும் ஆவேசம் அடைந்தார்.

மேலும் ’சர்கார் படத்தில் விஜய் எப்படி 49பி என்ற பிரிவில் ஓட்டு போட்டாரோ, அதேபோல் தனக்கும் அந்த பிரிவின்படி ஓட்டளிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வாதாடினார். இதனை அடுத்து தேர்தல் அலுவலர்கள் சில நிமிடங்கள் ஆலோசனை செய்து அதன்பின் 49பி பிரிவின் படி அவருக்கு வாக்களிக்க அனுமதி அளித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படம் வெளிவந்த பின்னர் தான் 49பி என்ற பிரிவு இருப்பதே பலருக்கு தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 49பி என்ற பிரிவில் வாக்களித்த அந்த பெண்ணுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version