தமிழ்நாடு
ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது: எடப்பாடியை விளாசிய கமல்!
தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தமிழக அரசியலிலும் மக்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
கனமழை என்றால் நடந்து சென்று பார்வையிட முடியாது எனவே ஹெலிகாப்டரில் செல்லலாம். ஆனால் புயல் பாதிக்கப்பட்ட இடங்களை நடந்து சென்றே பார்வையிடலாம். அப்படியிருக்க முதல்வர் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மக்களையும் சரிவர சந்திக்கவில்லை, அவர் ஹெலிகாப்டரில் வந்து பார்வையிட அவசியமில்லை என பல அரசியல் கட்சியினர் விமர்சனம் வைத்து வந்தனர். இந்நிலையில் அனைத்து பகுதிகளையும் பார்வையிட வேண்டும் என்பதற்காகவே ஹெலிகாப்டர் மூலமாக ஆய்வு செய்ததாக எடப்பாடி பழனிச்சாமி நேற்று விளக்கமளித்தார்.
இந்நிலையில் மக்கள் நீதி மைய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இந்த ஹெலிகாப்டர் பயணத்தை விமர்சித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்… புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு? என கூறியுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், அம்மையப்பன், அம்மாபேட்டை, கோட்டூர் மக்கள், கோபத்தில் சாலைமறியலில் ஈடுபட்டிருந்தபொழுது உணவுப்பொருட்கள் கொண்டு சென்ற எங்களிடம், எங்களுக்கு உணவு இருக்கிறது, மின்சாரம்தான் இல்லை என்று பெருந்தன்மையாக வழிவிட்டது தமிழனாக என்னை பெருமைப்படவைத்தது. இவர்களா ஏழைகள்? பெருந்தன்மைச் செல்வந்தர்கள். என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.