தமிழ்நாடு
இப்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களாவது நடைமுறைக்கு வருமா? கமல்ஹாசன் கேள்வி
தமிழக பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டங்கள் வரவில்லை என்றும் இப்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களாவது வருமா என்ற சந்தேகம் மக்களுக்கு இருக்கிறது என்றும் உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது தமிழக பட்ஜெட். அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி பெறப் பண உதவி, பெரியார் சிந்தனைகளை மொழிபெயர்க்க நிதி, மாநிலம் முழுதும் நூல்களுக்கான திட்டம் போன்றவை நம்பிக்கை தருகின்றன.
அதே நேரத்தில் அழுத்தம்திருத்தமாக அளிக்கப்பட்ட வாக்குறுதி ஒன்றைப் பற்றிய பேச்சே இல்லை. குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை வழங்குவதாகச் சொன்னதுதான் அது. மய்யத்தின் செயல் திட்டம், மாற்றுக்கட்சியின் வாக்குறுதியாக வந்தபோது வரவேற்றோம். அது வெறும்சொல்லாகப் போனதே ஆதங்கம்.
எரிவாயு விலையைக் குறைக்கும் அறிவிப்பிருக்குமென எதிர்பார்த்ததிலும் ஏமாற்றம். இப்போது தரப்பட்டிருக்கும் திட்டங்களேனும் நடைமுறைக்கு வருமா என்று சாமானிய மக்கள் சந்தேகம் கொண்டால் அது நியாயம்தானே? சொல் அல்ல, செயல் என்று காட்டும் அரசே மக்கள் நம்பிக்கையைப் பெறும்.