தமிழ்நாடு
டாஸ்மாக் மூட வேண்டும் என கூறுங்களேன் பார்ப்போம்: ஸ்டாலினுக்கு சவால் விடுத்த கமல்ஹாசன்!
நான் சொன்னதை எல்லாம் முதல்வர் செய்கிறார் என்று பெருமை கூறிக்கொள்ளும் திமுக தலைவர் முக ஸ்டாலின் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று கூறட்டும் பார்க்கலாம் என திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் சவால் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நான்காவது ஆண்டு தொடக்க விழா சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேசியபோது, ‘திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் நான் சொல்வதைத்தான் முதல்வர் செய்கிறார் என்று கூறி மகிழ்ந்து வருகிறார். ஆனால் டாஸ்மாக்கை மூட சொல்லுங்கள் பார்ப்போம் என்று கூறினார்.
மேலும் ஆட்சியில் இருக்கும்போதே ஒரு முதல்வர் கைதாகும் வரலாற்றை ஏற்படுத்திய கட்சி அதிமுக என்றும் இரட்டை இலை என்றால் ஏதோ இரண்டு பேர்கள் மட்டுமே சாப்பிட இலை போட்டு கொண்டதாக நினைத்துக் கொண்டார்கள் என்றும் அவர் கூறினார்.
ஊத்திக் கொடுத்த கட்சி அதிமுக என்றும், திமுகவும் அதே விஷயத்தை தான் செய்கிறார்கள் என்றும் இரண்டு கட்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை என்றும் அவர் கூறினார். அரசியலுக்கு வந்தால் எனக்கு வரவேண்டிய 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறினார்கள், ஆனாலும் பரவாயில்லை என்று நான் அரசியலுக்கு வந்தேன். மக்களின் நன்மை மட்டுமே எனக்கு முக்கியம்’ என்று மேலும் கூறினார்.
மேலும் மார்ச் 7ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் மாநாடு நடைபெறும் என்றும் அந்த மாநாடு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமலஹாசன் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.