தமிழ்நாடு
‘ரஜினி சொல்லிட்டாரு, அதே போதும், நாங்க பாத்துக்கிறோம்..’ கமல் குஷி
எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம் என ரஜினி சொன்னதே எங்களுக்கு போதும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் எழுச்சியில் இருந்து பின்வாங்கி விட்டார். அவர் பின்வாங்கினாலும், ரஜினியின் ரசிகர்கள் அதே எழுச்சியுடனே இருக்கின்றனர். சென்னையில் ரஜினி வீட்டு முன்பு போராட்டம் நடத்துவது, விதவிதமான ஸ்டைலில் ரஜினி போல் ஆடை அணிந்து கொண்டு வருவது, நடுரோட்டில் தர்ணா செய்வது என ரஜினி ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று பிடிவாதமாய் உள்ளனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி மக்கள் மன்ற தலைமை தரப்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதில் ரஜினி ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது ஓய்வில் இருக்கும் கமல்ஹாசன் வீடியோ கான்பரஸிங் மூலமாக இன்று செய்தியாளர்களைச் சந்திதார். அப்போது ரஜினியிடம் ஆதரவு கேட்டீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த கமல், ‘ரஜினி மன்ற நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் சேர்ந்து கொள்ளலாம் என்று ரஜினி சொல்லிவிட்டார். அவர் சொன்னதே போதும். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்’ என்றார்.