தமிழ்நாடு
‘ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர்’- மோடியை வறுத்தெடுத்த கமல்
![Kamal - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/Kamal.jpg)
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தொற்று பாதிப்பும், இறப்பு எண்ணிக்கையும் உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை. ஆக்ஸிஜன் இல்லை. ரெம்டேஸீவர் மருந்து இல்லை. தடுப்பூசிகள் இல்லை. ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம்.
பெரிய பெரிய தலைவர்கள் முதல் கடைக்கோடி மனிதர்கள் வரை நாளுக்கு நாள் தொற்று காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இந்த இரண்டாவது அலையில் குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை.
பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி எடுத்துக் கொள்ள முன்வருபவர்களிடம் மது, புகை போன்ற பழக்கம் இருக்கிறதா என்பது பற்றியோ, உடல்நிலையைப் பற்றியோ வழக்கமாக உட்கொள்ளும் மருந்துகளைப் பற்றியோ கேள்விகள் எழுப்பப்படுவதில்லை. குறைந்த பட்சம் ரத்த அழுத்தம் கூட பார்க்கப்படுவதில்லை. ஊசி போட்டப் பின் போனில் அழைத்துக் கூட உடல்நலம் குறித்து விசாரிக்கப்படுவதில்லை. முதல் தவணை முடிந்து இரண்டாவது தவணை தடுப்பூசி போடச் சென்றால் மருந்து கையிருப்பு இல்லை என்கிறார்கள்.
தடுப்பூசிகள் எடுத்துக் கொண்ட பின் உடல்நிலையில் ஏற்படும் ஆபத்தற்ற பக்கவிளைவுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், தடுப்பூசி குறித்த அச்சமும் பரவலாக நீடிக்கிறது.
உலகமே மருந்துக்குத் திண்டாட ஏப்ரல் 11 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளில் 12.10 சதவீதம் வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைத்திருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. பற்பல விதிமுறைகளை விதிப்பவர்கள் டாஸ்மாக் கடைகளென்று வந்துவிட்டால் கரிசனத்துடன் அணுகவதும் ஏற்புடையதல்ல. தேர்தல் முடிவை எதிர்பார்த்து முடங்கி கிடக்கிறதோ தமிழக அரசு எனும் ஐயம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
என் சகோதரருக்கே படுக்கை கிடைக்கவில்லை என மத்திய அமைச்சர் ட்வீட்டுகிறார். மாநிலங்கள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தாமல், எங்களிடம் வந்து மருந்து கேட்டால் எப்படி என்கிறார் இன்னொரு அமைச்சர். முன் நின்று நாட்டைக் காக்க வேண்டிய பிரதமரோ தேர்தல் பிரச்சாரம் செய்து ஓய்ந்த இடைவேளையில் ‘ஊசி போடும் திருவிழா’, ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’ என விதம் விதமான ஃபேன்ஸி பெயர்களைச் சூட்டிக் கொண்டிருக்கிறார்.
மாநில அரசுகள் மருந்து கொள்முதல் செய்வதில் முழுச் சுதந்திரம் இன்னமும் அளிக்கப்படவில்லை. தீர்வுகளைத் தர முடியாதவர்கள் அதிகாரத்தை மட்டும் கையில் வைத்திருப்பது கேலிக்குரியது. ஆளாளுக்கு அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல என்பதைப் புரிந்து கொண்டு முன்னகர வேண்டும்.
மத்திய மாநில அரசுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் ஒத்திசைவுடன் தெளிவான திட்டிமடலுடன் செயல்பட வேண்டிய தருணம் இது. அரசின் ஒவ்வொரு அலகும் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்பதுத்துவதிலும், நோயாளிகளைக் குணப்பத்துவதிலும் சிறு பிசகும் இல்லாமல் செயல்ப்பாக வேண்டும். ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர்’ என அறிக்கை வாயிலாக கமல் கூறியுள்ளார்.