தமிழ்நாடு

அடுத்து என்ன..?- ஆலோசனைக்குப் பின்னர் கமல் பளீச் பதில்

Published

on

2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் அளித்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்படி திமுக மொத்தம் இருக்கும் 234 தொகுதிகளில் 133ல் வெற்றி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ஆளுங்கட்சியான அதிமுக, 66 இடங்களில் வெற்றியடைந்துள்ளது.

இந்த இரண்டு கட்சிகளைத் தொடர்ந்து காங்கிரஸ் 18 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. அதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சி, 5 இடங்களைப் பிடித்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலா 4 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளன. இதில் பாஜக, 20 ஆண்டுகளுக்குப் பின்னரும், விசிக, 15 ஆண்டுகளுக்குப் பின்னரும் சட்டமன்றத்துக்குத் தங்களது கட்சி உறுப்பினர்களை அனுப்பி வைக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஎம் தலா இரண்டு இடங்களை வென்றுள்ளன. மற்றப்படி களத்தில் மாற்று அணிகளாக நின்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

அதே நேரத்தில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, சட்டமன்றத் தேர்தலில் சுமார் 6.85 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. அதே நேரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி, சுமார் 4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது என்று சொல்லப்படுகிறது. இதனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட அக்கட்சிக்கு வாக்கு விகிதம் குறைந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல், கட்சியின் முக்கிய நிர்வாகிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அவர், ‘கட்சியில் வரும் காலங்களில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படும். கடுமையான முடிவுகள் எடுக்கப்படும். தேர்தலின் வெற்றி மற்றும் தோல்வி என்பது கட்சியின் நோக்கத்தை எந்த விதத்திலும் மாற்றி விடாது’ என்று கறாராக பேசியுள்ளார். இதனால் மய்யம் கட்சி தரப்பிலிருந்து விரைவில் சில அதிரடி முடிவுகள் வெளி வரலாம்.

seithichurul

Trending

Exit mobile version