இந்தியா

ஹிஜாப் விவகாரம் – கர்நாடக உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு…..

Published

on

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை அடுத்து பெரும் பதட்டம் ஏற்பட்டது. அந்த மாணவிகள் கல்லூரிகள் அனுமதிக்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, கல்லூரி மாணவர்களின் போர்வையில் அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் காவி துண்டை அணிந்து கல்லூரிகளுக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்வதாக சமூகவலைத்தளங்களில் புகார் எழுந்தது.

மேலும், கர்நாடகாவை சேர்ந்த பாஜகவினர் இதை கையில் எடுத்து அரசியல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கல்லூரி மாணவர்களை தூண்டிவிட்டு ஹிஜாப் கல்லூரிகளில் ஆர்ப்பாட்டம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

ஹிஜாப் அணிந்து வந்த ஒரு கல்லூரி பெண்ணின் அருகில் சென்று பலர் ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’ என முழங்கினர். ஆனாலும் அந்த மாணவி அஞ்சவில்லை. மேலும், அவர்களை எதிர்க்கும் விதமாக ‘அல்லாஹு அக்பர்’ என முழங்கினார். தனக்கு எதிராக அத்தனை பேர் இருந்தும் அவர் அஞ்சவில்லை. சிங்கப்பெண்ணாக எதிர்ப்பை தெரிவித்து நெட்டிசன்களின் பாராட்டை பெற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதன் பின்னரே இந்த விவகாரம் சூடு பிடித்தது.

ஒருபக்கம், ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை என மாணவர்கள் தொடர்ந்த வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பள்ளி கல்லூரிகளில் உள்ள சீருடை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஆனால் அதே நேரத்தில் ஹிஜாப் அணிவது குறித்த விசாரணையை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர்.

இதில் தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் கல்லூரிகளுக்கு அணிந்து செல்ல தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version