சினிமா
சிம்புவின் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யலாம்: நீதிமன்றம் அதிரடி!
நடிகர் சிம்பு சமீப காலமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் பட வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். ஆனால் தற்போது அவருக்கு பழையை பிரச்சனை ஒன்று நெருக்கடியை கொடுத்துள்ளது.
நடிகர் சிம்பு கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பேஸ்சன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடம் இருந்து அரசன் படத்தில் நடிக்க முன்பணமாக 50 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் ஐந்து வருடங்கள் கடந்தும் இந்த படம் இன்றுவரை தொடங்கப்படவில்லை. சிம்பு கால்ஷீட் ஒதுக்காமல் இழுத்தடித்தது தான் இதற்கு காரணம். இதனால் நாங்கள் மிகப்பெரிய நஷ்டம் அடைந்துள்ளோம் என தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடி முறையிட்டது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு தொடங்காததால் தனக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், இதனால் முன்பணத்தை திருப்பி தர இயலவில்லை என சிம்புவின் தரப்பில் வாதாடப்பட்டது. ஆனால் இதனை ஏற்காத நீதிபதி மெ.கோவிந்தராஜ் அதிரடி தீர்ப்பை அளித்தார்.
நடிகர் சிம்பு அரசன் படத்தில் நடிக்க வாங்கிய முன்பணம் ரூ.50 லட்சத்தை ரூ.35.50 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.85.50 லட்சம் திருப்பிச் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் நடிகர் சிம்பு 4 வாரத்திற்குள் இதற்கான கடன் பாதுகாப்பை அளிக்கவில்லையென்றால் அவர் வீட்டில் டிவி, கட்டில், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் ஜப்தி செய்யப்படும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.