சினிமா செய்திகள்
’ஜகமே தந்திரம்’ நடிகரின் கார் நடுரோட்டில் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு!
தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவரின் கார் நடுரோட்டில் அடித்து நொறுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் சிவதாஸ் என்ற முக்கிய கேரக்டரிலும், ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். இவர் ஜோசப் என்ற படத்தின் மூலம் கவனிக்கப்பட்டார் என்பதும் மலையாள திரையுலகில் இவர் ஒரு முக்கிய நடிகராக வளர்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக சாலை போக்குவரத்து தடைபடும் நிலையில் அந்த வழியாக நடிகர் ஜோஜூ தனது காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது சாலையை ஏன் மறீக்கிறீர்கள் என கூறி போராட்டக்காரர்களுடன் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த போராட்டம் செய்த காங்கிரஸ் கட்சியினர் அவரது காரை அடித்து நொறுக்கினர். இதனால் அவருடைய கார் கண்ணாடி நொறுங்கியது. இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள போலீசார் அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோஜூ ஜார்ஜ், ‘காங்கிரஸ் காரர்களின் போராட்டம் முறை குறித்தே நான் எதிர்ப்பு தெரிவித்தேன். என் காரில் நோயாளி ஒருவர் இருந்தார். அவர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்ததால் நான் சாலை மறியலை கைவிடும்படி அமைதியாக சொன்னேன். அதற்கு என் காரை அடித்து நொறுக்கி விட்டனர், இது தொடர்பாக போலீசில் புகார் செய்துள்ளேன் என்று கூறினார்.
இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் உள்பட ஒரு சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.