கிரிக்கெட்

என்ன மனுஷன்யா! விராட் கோலியை பாராட்டிய இங்கிலாந்து கேப்டன்.. கொண்டாடும் ரசிகர்கள்

Published

on

சென்னை: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிற்கு தசைப்பிடிப்பு ஏற்பட்ட உடனே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவருக்கு முதலுதவி செய்தது குறித்து ஜோ ரூட் பாராட்டு தெரிவித்துள்ளார். கோலியிடம் இருந்து சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் நீங்கள் எதிர்பார்க்கலாம் என்றும் கூறினார்.

இந்தியா இங்கிலாந்து இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி இங்கிலாந்து அணியில் பர்ன்ஸ் மற்றும் சிப்ளி நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஆனாலும் பர்ன்ஸ் 33 ரன்களிலும் லாரன்ஸ் 0
ரன்களிலும் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் இன்று நாள் முடியும் வரை காலத்தில் நின்று இந்திய பவுலர்களை சிதற விட்டார். அவருடன் ஜோடி சேர்ந்த சிப்ளி 87 ரன்கள் எடுத்து முதல்நாள் ஆட்டம் முடியும் கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதிரடியாக ஆடிய ஜோ ரூட் தன்னுடைய நூறாவது போட்டியில் சதம் அடித்து 128 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.இந்த நிலையில் தான் இந்த போட்டியின் இடையே ஜோ ரூட்டுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அஸ்வின் வீசிய 87 வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்த பின்னர் ஜோ ரூட்டின் காலில் லேசான தசை பிடிப்பு ஏற்பட்டது. அப்போது அவருக்கு மருத்துவர்கள் வந்து உதவும் முன்பே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உடனடியாக சிறிது முதலுதவி செய்தார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த நிலையில் தான் கோலியின் செயலை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பாராட்டியுள்ளார். முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த பின்னர் பேசியவர், இது ஒரு சிறிய தசைப்பிடிப்பு தான் ஆனாலும் சற்று வெறுப்பாக இருந்தது. விராட் கோலி எனக்கு உதவியது சிறப்பானது. அவரிடம் சிறந்த ஸ்போட்ர்ஸ்மேன்ஷிப்பை நீங்கள் எதிர்பார்க்கலாம் என்றார். இதற்கிடையே விராட் கோலியின் செயலை பாராட்டி ஐசிசி, பிசிசிஐ ஆகிய அமைப்புகள் தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் வீடியோவை ஷேர் செய்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் ரசிகர்கள் பலரும் டோனியின் செயலுடன் விராட் கோலியை ஒப்பிட்டு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Trending

Exit mobile version