கிரிக்கெட்

INDvENG – மொயீன் அலி பற்றிய கருத்து; மன்னிப்பு கேட்ட ஜோ ரூட் – சர்ச்சையான பிரஸ் மீட்!

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகின்றது. முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் உள்ள சேப்பாகம் மைதானத்தில் நடந்தது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அடுத்து வரும் இரு போட்டிகள் குறித்தான ஆர்வம் மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், அந்த அணியின் ஆல் ரவுண்டரான மொயீன் அலி பற்றி சொல்லிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற்சி முறையில் வீரர்களைத் தேர்வு செய்து களமிறக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கெடுத்த பல வீரர்கள், அடுத்து வரும் இரு போட்டிகளில் இருக்க மாட்டார்கள். அப்படித்தான் ஜோஸ் பட்லர் மற்றும் மொயீன் அலி ஆகியோருக்கு அடுத்து வரும் இரு டெஸ்டுகளில் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. மொயீன் அலி, இரண்டாவது டெஸ்ட் போட்டியை மட்டுமே விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அலி, 43 ரன்களையும் எடுத்தார்.

அவரின் சுழற் பந்து வீச்சை இந்திய அணி எதிர்கொள்ளத் திணறியது. இதனால் அவர் அடுத்து வரும் இரு போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பலர் கூறி வந்தனர். இப்படியான சூழலில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜோ ரூட், ‘மொயீன் அலி, இங்கிலாந்துக்குச் செல்ல வேண்டும் என்று அவராகத் தான் முடிவெடுத்தார்’ என்று கூறினார். இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள், மொயீன் அலியை கடுமையாக விமர்சித்தார்கள்.

அதே நேரத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தான், மொயீன் அலியை விளையாட வேண்டும் என்று சொல்லி ஓய்வு கொடுத்துள்ளது. இதனால் மொயீன் அலிக்கும் ஜோ ரூட்டுக்கும் இடையில் டிரெஸ்ஸிங் அறையில் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து ரூட், மொயீன் அலியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து, தான் சொன்ன கருத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ளாராம். இதனால், தற்போது இங்கிலாந்து அணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் சுழற்சி முறை வீரர்கள் தேர்ச்சியைப் பல முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும் விமர்சித்து வருகிறார்கள். இந்தியாவுக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்றால் மட்டும் தான் இங்கிலாந்து அணியால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கெடுக்க முடியும். ஆனால் அந்த அணி நிர்வாகமோ, இந்தியாவுக்கு எதிராக தங்களது சிறந்த வீரர்களை களமிறக்காமல் இருக்கிறது என்று விமர்சிக்கப்படுகிறது.

 

 

 

 

 

 

 

Trending

Exit mobile version