தொழில்நுட்பம்
உஷார்.. ஜியோ பெயரில் போலி ஆஃபர் எஸ்எஸ்எஸ், வாட்ஸ்ஆப் பகிர்வுகள்!
நற்செய்தி! கொரோனா வைரஸ் காரணமாக ஜியோ மற்றும் பேஸ்புக் இணைந்து உங்களுக்கு 6 மாதங்களுக்கு 25 ஜிபி தரவு இலவசமாக வழங்குகிறது என்று உங்களுக்கு எஸ்எஸ்எஸ் அல்லது வாட்ஸ்ஆப் தகவல் வந்ததா? அப்படியானால், உங்களுக்கு ஒரு ஷாக் செய்தி காத்திருக்கிறது. ஆம், உங்கள் போனை சைபர் மோசடியாளர்கள் தாக்க முயல்கிறார்கள் என்று அர்த்தம்.
உடனே பயப்பட வேண்டாம். இப்படி உங்களுக்கு எஸ்எம்எஸ் வந்தால், தயவு செய்து அதில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் போனில் உள்ள தரவுகளைத் திருட விரும்புபவர்கள் இது போன்ற போலி சலுகைகளுக்கான அறிவிப்புகளைப் பரப்புவார்கள்.
இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த, ஜியோ நிறுவனத்தின் பத்திரிக்கை தொடர்பாளர், “நாங்கள் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு, இது போன்ற போலி எஸ்.எம்.எஸ் போன்றவற்றை நம்ப வேண்டாம் என்று தகவல் தெரிவித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
பொதுவாக இந்த எஸ்எம்எஸ் இந்திய மொபைல் எண்களில் இருந்து வருகிறது. அதில் வரும் இணைப்பை கிளிக் செய்தால், சலுகையைப் பெறச் செயலி ஒன்று பதிவிறக்க வேண்டும் என்ற கோரிக்கை வருகிறது. அதன் மூலமாகவே பல சைபர் குற்ற மோசடிகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.