இந்தியா
ரோஜாவுக்கு அடித்த ஜாக்பாட்: ஜெகன் மோகன் ரெட்டி அளித்த இன்ப அதிர்ச்சி!
நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராகப் பதவியேற்றார்.
இந்த தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்திலும் தேர்தல் பணியிலும் ஈடுபட்டார் நடிகை ரோஜா. மேலும் அரசியலில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மிகவும் பக்கபலமாக இருந்து வருபவர் ரோஜா. இதனையடுத்து தேர்தலில் வெற்றிபெற்றபோது ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி அமைத்த புதிய அமைச்சரவையில் ரோஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இது ஆந்திர ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் ரோஜா. இதனையடுத்து பல்வேறு வதந்திகள் பரவியதால் ரோஜா, ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். இந்நிலையில் ஆந்திரப் பிரதேச தொழிற்துறை உள்கட்டமைப்புக் கழகத்தின் தலைவராக ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது.
மாநிலத்தின் தொழிற்துறை உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவர் பதவி மாநிலத்தின் மிக முக்கிய நியமன பதவிகளில் ஒன்றாகும். தொழிற்துறை மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பாக நிலம் ஒதுக்குவதற்கான அனைத்து அதிகாரங்களும் இவருக்கே உள்ளது. புதிய தொழில் நிறுவனங்களை ஏற்பது, நிராகரிப்பது என அனைத்து அதிகாரங்கள் இந்தக் கழகத்தின் தலைவருக்கு உண்டு. மேலும் அமைச்சரவை சிறிது காலத்திற்கு பின்னர் மாற்றி அமைக்கும் போது ரோஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.