சினிமா
மார்ச், ஏப்ரல் என அடுத்தடுத்து வரிசை கட்டும் ஜெயம் ரவி படங்கள்.. அகிலன் ரிலீஸ் அறிவிப்பு!
பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்பே ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இறுதி வரையில் அகிலன் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஜெயம் ரவி நடித்த அகிலன் திரைப்படம் திரைக்கு வர உள்ளதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா நடித்த பூலோகம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மீண்டும் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் தான் இந்த அகிலன்.
ஹார்பரில் நடக்கும் கடத்தல் சம்பந்தமான கதையாக இந்த அகிலன் உருவாகி உள்ளது. நெகட்டிவ் ஷேட் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள நிலையில், பிரியா பவானி சங்கர் மாஃபியா படத்திற்கு பிறகு போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் நடித்துள்ளார். நடிகை தான்யா ரவிச்சந்திரனும் இந்த படத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ள நிலையில், வரும் மார்ச் 10ம் தேதி ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் திரைக்கு வருகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் என அடுத்தடுத்து தனது புதிய படங்களை வெளியிட காத்திருக்கிறார் ஜெயம் ரவி.
மேலும், இயக்குநர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள இறைவன் திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.