தமிழ்நாடு
ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டதே சசிகலாவுக்காகத் தான் – டிடிவி தினகரன் சொல்லும் ‘குபீர்’ விளக்கம்!
![Sasikala - TTV Dhinakaran - Jayalalitha - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/Sasikala-TTV-Dhinakaran-Jayalalitha.png)
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா இன்று சிறையிலிருந்து விடுதலை ஆனார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இன்றைய தினத்திலேயே ஜெயலலிதாவின் நினைவிடமும் மெரினா கடற்கரையில் திறக்கப்பட்டுள்ளது. இப்படி இரண்டு சம்பவங்களும் ஒரே நாளில் நடந்துள்ளதை குறிப்பிட்டுப் பேசியுள்ள அமமுக பொதுச் செயலாளர் தினகரன், ‘அம்மாவின் நினைவிடம் இன்று திறக்கப்பட்டதே சின்னமாவுக்காகத் தான்’ என்று புது வித விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், ‘சின்னம்மா சசிகலாவின் விடுதலையை எதிர்நோக்கித் தான் நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம். உண்மையான அதிமுக தொண்டர்கள் அவரது வருகையை எதிர்பார்க்கிறார்கள். தமிழகமே அவரது அரசியல் வருகையை எதிர்பார்க்கிறது. அவருக்கு நாங்கள் சிறப்பான வரவேற்பைக் கொடுப்போம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதே அஇஅதிமுக என்னும் கட்சியை மீட்டெடுப்பதற்காகத் தான். அதற்கான பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். அது கூடிய விரைவில் நடக்கும்.
சின்னம்மா வெளியே வரும் அதே நாளில் அம்மாவின் நினைவிடம் திறந்திருப்பதை, நான் பாசிட்டிவாகத் தான் பார்க்கிறேன். சின்னம்மாவின் விடுதலையைச் சென்னையிலும் அனைவரும் கொண்டாடுகிறார்கள் என்கிற நோக்கில் தான் அதைப் பார்க்கிறேன்’ என்று விளக்கமாக பேசியுள்ளார்.