தமிழ்நாடு
ஜெ. தனது உடல்நிலை குறித்து மக்களுக்கு தெரிவிக்க விரும்பினார்: மருத்துவர் செந்தில்குமார் வாக்குமூலம்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் தனது உடல்நிலை குறித்து மக்களுக்கு தெரிவிக்க விரும்பியதாக விசாரணை ஆணையத்தில் மருத்துவர் செந்தில்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும், மர்மங்களும் இருந்ததால் அதனை நீக்கி நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்ததையடுத்து அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம் ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இந்த விசாரணை ஆணையம் நடைபெற்று வருகிறது. பல்வேறு தரப்பினருக்கு இந்த விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் மருத்துவர் செந்தில்குமார் உட்பட 15 பேரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றுள்ளது.
இதில் மருத்துவர் செந்தில்குமார் அளித்த வாக்குமூலத்தில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சோர்வாக இருந்தார். அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் கண்விழித்த ஜெயலலிதா, தனது உடல்நிலை குறித்து மக்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் மக்கள் பயப்படும் விதத்தில் தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.