தமிழ்நாடு

எச்.ராஜாவை சைபர் சைக்கோ என அமைச்சர் ஜெயக்குமாரே கூறியுள்ளார்: தினகரன் பிரச்சாரம்!

Published

on

மக்களவை தேர்தலுக்காக அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் தேர்போகி பாண்டியை ஆதரித்து சிவகங்கை அரண்மனை வாசலில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய தினகரன், தமிழகத்தை வஞ்சிக்கின்ற மோடிக்கும், அவரை டாடி என்று அழைக்கின்ற பழனிசாமி கம்பெனிக்கும் பாடம் புகட்ட வேண்டும். மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும். அமமுக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்று பிரதமரைத் தேர்வு செய்யும் வகையில் சரித்திரம் அமையும். நீட் தேர்வு உள்ளிட்ட பலவற்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய தினகரன் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவின் வேட்பாளர் எச்.ராஜாவையும் விமர்சித்தார். சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக நிற்கும் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை, சைபர் சைக்கோ என அமைச்சர் ஜெயக்குமாரே கூறியுள்ளார். எனவே, அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டிக்கு நீங்கள் பரிசுப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். பாஜக அதிமுக கூட்டணி அமைவதற்கு முன்னர் அமைச்சர் ஜெயக்குமரை எச்.ராஜா விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார் எச்.ராஜாவை சைபர் சைக்கோ என குறிப்பிட்டார். இதனை தற்போது தனது பிரச்சாரத்தில் பயன்படுத்தியுள்ளார் டிடிவி தினகரன்.

seithichurul

Trending

Exit mobile version