தமிழ்நாடு
ஓபிஎஸ் மகன் விவகாரம்: எனக்கு ஜோசியம் தெரியாது என கிண்டல் செய்த அமைச்சர் ஜெயக்குமார்!
அதிமுக சார்பில் மக்களவையில் உள்ள ஒரே எம்பி துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே. பாஜக கூட்டணியில் இடம்பெற்ற அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்றும் அந்த அமைச்சர் பதவி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு கிடைக்கும் என்றும் பேசப்பட்டது. ஆனால் தற்போதுவரை அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
இந்த அமைச்சர் பதவி விவகாரத்தில் பல்வேறு அரசியல் தலையீடுகளும், பல்வேறு காதுவழி செய்திகளும் பரவின. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரவீந்திரநாத் குமாரிடம் மத்திய அமைச்சர் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், மத்திய அமைச்சர் பதவி குறித்து நான் யோசித்ததே இல்லை. தலைமையே இறுதி முடிவெடுக்கும் என்றார்.
இந்நிலையில் சென்னை திநகரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம், துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, எனக்கு ஜோசியம் தெரியாது என்று பதில் அளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.