இந்தியா
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் அதிரடியாக கலைப்பு: ஆளுநரை வைத்து அரசியல் செய்கிறதா பாஜக?
கடந்த 5 மாதமாக முடக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தை நேற்று இரவு அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்திருக்கிறார். இதன் பின்னணியில் பாஜக அரசியல் செய்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
கடந்த ஜூன் மாதம் மெஹபூபா முப்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து பாஜக, மக்கள் ஜனநாயக கூட்டணி அரசு கவிழ்ந்தது இதனால் சட்டமன்றம் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாஜக தவிர மற்ற கட்சிகள் இணைந்து முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா தலைமையில் ஆட்சி அமைப்பது குறித்து உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் ஆளுநர் சத்யபால் மாலிக் சட்டமன்றத்தை கலைத்து உத்தரவிட்டிருப்பது அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் கடந்த ஐந்து மாதமாக சட்டமன்றத்தை கலைக்க வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மெகபூபா இப்போது ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் அனுப்பிய நிலையில் சட்டமன்றம் கலைக்கப்பட்டிருப்பது என்பது வேறு விதமான தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
பாஜக தவிர மற்ற கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோருகின்றன என்று தெரிந்த பின் சட்டமன்றத்தைக் கலைப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.