இந்தியா
சுஷ்மாவுக்கு டாட்டா: மத்திய அமைச்சராக பதவியேற்றார் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர்!
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக இன்று பதவியேற்றார்.
வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இந்த பதவியேற்பு விழாவில் பல நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். பல மாநில முதல்வர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், உலக தலைவர்கள் பலரும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
சரியாக 7 மணிக்கு விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனையடுத்து இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றார். மோடி பதவியேற்ற பின்னர் அவரது அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இதில் புதிய முகமாக மத்திய அமைச்சராக பதவியேற்றார் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர். இவர் வெளியுறவுத்துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்தவர். இவருக்கு வெளியுறவுத்துறை ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. கடந்த முறை மோடி ஆட்சியில் வெளியுறவுத்துறையை கவனித்த மூத்த அமைச்சர் சுஷமா சுவராஜுக்கு இந்தமுறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இவருக்கு உடல் நலக்குறைவு உள்ளதால் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.