தமிழ்நாடு
அரசியலே வேண்டாம், பேரவை என்ற பெயரில் டார்ச்சர் செய்யாதீர்கள்: அதிரடி அறிவிப்பை உடனே டெலிட் செய்த தீபா!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் புகழின் வெளிச்சத்துக்கு வந்தார். ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி அரசியலில் இறங்கி அதிமுகவை கைப்பற்ற முயற்சித்தார். ஆனால் அவரால் முடிந்ததோ எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தான்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் எந்த பக்கம் செல்வது என்று புரியாமல் திகைத்து நின்ற அவரது தொண்டர்களுக்கு தீபா அடுத்த ஜெயலலிதாவாக தென்பட்டார். இதனையடுத்து அவரது வீட்டில் தொண்டர்கள் கூட்டம் அலை மோதியது. அடிக்கடி செய்தியாளர்கள் சந்திப்பு என தீபா ஊடக வெளிச்சத்தில் மிதந்தார். இதனை பயன்படுத்தி அரசியலின் ஆழம் தெரியாமல் குதித்த தீபா முதலில் தனது பெயரிலேயே எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பேரவை ஒன்றை ஆரம்பித்தார்.
தொடக்கத்தில் இந்த பேரவை ஓரளவுக்கு செயல்பட்டாலும் தீபாவின் நடவடிக்கை மற்றும் அவரை சுற்றியுள்ளவர்களின் செயல்பாடுகள் விமர்சனங்களுக்கு உள்ளானது. டிரைவர் ராஜா மற்றும் கணவர் மாதவன் ஆகியோர் இடையேயான மோதல் ஊடகங்களில் வெளியாகி தீபா பேரவையை மேலும் டேமேஜ் ஆக்கியது. தொடர்ந்து தீபா பேரவை கேலியாக பேசப்பட்டு வந்தது. இருந்த கொஞ்சநஞ்ச தொண்டர்களும் பேரவையின் மோசமான செயல்பாடுகளால் விலகிச்சென்றனர்.
கிட்டத்தட்ட அப்படியோரு பேரவை இன்னமும் இருக்கிறதா என்று கேட்கிற நிலையில் இன்று தீபாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு அதிரடி அறிவுப்பு வெளியானது. எனக்கு அரசியலே வேண்டாம். இனி பேரவை என்ற பெயரைச் சொல்லி என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். இனி நான் என் கணவர், குழந்தைகள் என்று குடும்பத்தோடு நிம்மதியாக வாழப் போகிறேன். பேரவை என்ற பெயரில் என்னை டார்ச்சர் செய்யாதீர்கள். இனியும் அப்படி செய்தால் போலீஸுக்கு போய்விடுவேன் என எச்சரித்துள்ளார்.
இந்த அறிவிப்பை வெளியிட்ட பின்னர் என்ன நினைத்தாரோ தீபா தெரியவில்லை உடனடியாக அதனை டெலிட் செய்துவிட்டார். ஆக தீபா தற்போதும் அரசியலில் தொடர்கிறார். இந்நிலையில் தீபா மன உளைச்சலில் இருப்பதாகவும். சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.