தமிழ்நாடு

இது நம் கௌரவப் பிரச்சனை: அன்பகத்தில் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published

on

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்நிலையில் நிறுத்தப்பட்ட வேலூர் தொகுதி தேர்தலிலும் திமுக வெற்றிபெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினரை அறிவுறுத்தியுள்ளார். இது நமது கௌரவப் பிரச்சனை என சுட்டிக்காட்டியுள்ளார் அவர்.

நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல் மீண்டும் நடைபெற உள்ள நிலையில் அங்கு மீண்டும் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். அவரை வெற்றிபெற வைக்க திமுக முழு மூச்சாக களத்தில் இறங்கியுள்ளது. இதனையடுத்து வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் பற்றிய ஆலோசனைக்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் நடைபெற்றது. வழக்கமாக அறிவாலயத்தில் நடைபெறும் இதுமாதிரியான ஆலோசனை கூட்டம் இந்தமுறை அன்பகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாம் ஏதோ குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்துக் கடத்திப் போவதைப் போல பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்து வெற்றிபெற்று விட்டோம் என்று முதல்வரே பேசுகிறார். அதை முறியடிக்கணும்னா, அவர் சொல்றது பொய் என நிரூபிக்கணும்னா நாம் வேலூர் தேர்தலில் வெற்றிபெற வேண்டும். இல்லையென்றால் நாம் ஏற்கனவே பெற்ற வெற்றியும் விமர்சனத்துக்கு ஆளாகிவிடும். அதனால் எல்லாரும் கவனமா தேர்தல் வேலைகளைப் பாருங்கள். இது நம் கௌரவப் பிரச்சினை என தெரிவித்தார்.

Trending

Exit mobile version