செய்திகள்
கரையை கடக்கும் புயல்…4 மாவட்டங்களில் பலத்த காற்று.. வானிலை மையம் தகவல்…
தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளிலும் சாலையில் நீர் வெள்ளம் போல் ஒடுகிறது. சில இடங்களில் இடுப்பளவு தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. பல பகுதிகளில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அதோடு, புதிதாக உருவாகியுள்ள புயல் இன்று மாலை சென்னையை கரை கடக்கவுள்ளது. எனவே, புயல் கரையை கடக்கும் போது 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும், அதுவரை கனமழை பெய்யும் என ஏற்கனவெ சென்னை வானிலை மையம் இன்று காலை தெரிவித்தது.
மேலும், சென்னையிலிருந்து தென் கிழக்கு திசையில் 30 கி.மீ தொலையில் புயல் மையம் கொண்டுள்ளது எனவும், சற்று நேரத்தில் இந்த புயல் சென்னையில் கரையை கடக்கவுள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
இந்நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானில மையத்தின் இயக்குனர் பாலசந்திரன் ‘வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க துவங்கியுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் 16 கி.மீ. வேகத்தில் அந்த புயல் நகர்ந்து வருகிறது. அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த புயல் இதே நிலையில் நகர்ந்து செல்லும். இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 30 கி.மீ முதல் 40 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். மேலும், அம்மாவட்டங்கள் கனமழை பெய்யக்கூடும். அதோடு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்’ என தெரிவித்தார்.
மேலும், சென்னைக்கு மழைக்கு விடப்பட்ட ரெட் அலார்ட் நீக்கப்படுவதாகவும், அதேநேரம் காற்றுக்கான ரெட் அலர்ட் தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.