இந்தியா
‘புதிய இந்தியாவின் நோக்கங்களை பிரதிபலிக்கும்!’ – புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி மோடி பேச்சு!
பிரதமர் நரேந்திர மோடி, இன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
‘சென்டிரல் விஸ்டா’ என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நான்கு அடுக்குகள் இருக்கும் வகையில் கட்டப்படும் இந்த கட்டடம் 13 ஏக்கர் பரப்பரவில் விரிந்திருக்கும். சுமார் 20,000 கோடி ரூபாய் இந்த கட்டடத்தை கட்டி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்திற்கு முன்பாக இந்த கட்டடத்தை கட்டி முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தால் இந்தக் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய பிரதமர் மோடி, ‘இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். புதிய நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டுவது என்பது, ஒரு வகையில் பார்த்தால் இந்தியாவுக்கு அடிக்கல் நாட்டும் வகையில் இருக்கிறது. 1947 ஆம் ஆண்டு முதல் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் ஒரு திசையைக் கொடுத்தது என்றால், புதிய கட்டிடம் புதிய ஆத்மநிர்பார் இந்தியாவுக்கு வழிகாட்டும்.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் நம் நாட்டின் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்திடும். புதிய இந்தியாவின் நோக்கங்களை பிரதிபலிக்கும் வகையில் அது கட்டப்படும். தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டன. தொழில்நுட்பம் வளர வளர அதற்கு ஏற்றாற்போல பல மாற்றங்கள் அதற்கு செய்யப்பட்டன. ஆனால், அது அதன் முழு அளவை எட்டிவிட்டது’ என்று பேசினார்.