தமிழ்நாடு

துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!

Published

on

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தினர். மேலும் இந்த சோதனை இன்று காலையும் நடந்தது. இதனால் அங்கு திமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தேர்தல் நேரத்தில் இந்த சோதனை நடைபெறுவதால் அரசியல் வட்டாரமும் பரபரப்பாகியிருக்கிறது.

திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு சொந்தமாக பொறியியல் கல்லூரி ஒன்றும், சிபிஎஸ்சி பள்ளி ஒன்றும் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் காட்பாடி காந்தி நகரில் இருக்கும் துரைமுருகனின் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று பேர் சென்று சோதனை செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை என மீண்டும் துரைமுருகன் வீட்டுக்கு வந்த அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். துரைமுருகன் தீவிர ஆதரவாளர் தேவராஜ் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டது என்ன என்பது பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கும் இந்த நேரத்தில் எதிர்கட்சிகளை சேர்ந்தவர்களின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினர் மத்தியில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version