தமிழ்நாடு
மீண்டும் முக கவசம் அணிவது கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
![Polish_20230331_170650463 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/03/Polish_20230331_170650463.jpg)
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் நாளை முதல் (ஏப்ரல் 1), அரசு மருத்துவமனைகளில் முக கவசம் அணிவது கட்டாயம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முக கவசம் கட்டாயம்
சென்னையில், தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையைத் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். அப்போது அவர் பேசுகையில், நாளை முதல் (ஏப்ரல் 1) அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். தமிழக பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை. கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து உலகம் முழுவதும் தாண்டவம் ஆடி வருகிறது என்றும் அவர் கூறினார்.
அதிகரிக்கும் கொரோனா வைரஸ்
கடந்த சில நாட்களாகவே, கொரோனா வைரஸ் பரவல் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாகத் தான் தற்போது மீண்டும் முக கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பை அமைச்சர் அறிவித்துள்ளார். சமூக விலகலை கடைப்பிடிப்பது மட்டுமின்றி, கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறைப்படி கடைப்பிடித்து வந்தால், எந்தப் பாதிப்பும் இன்றி நலமோடு வாழலாம்.