தமிழ்நாடு
நீட் தேர்வை தமிழக அரசால் 100% தடுக்க முடியாது: பாலகுருசாமி, முன்னாள் துணைவேந்தர்
நீட் தேர்வை தமிழக அரசு மட்டுமின்றி யாராலும் தடுக்க முடியாது என்றும் குறிப்பாக தமிழக அரசால் 100% தடுக்க முடியாது என்றும் முன்னாள் துணைவேந்தர் பாலகுரு அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வை நடக்க விடமாட்டோம் என தேர்தலுக்கு முன்னர் திமுக வாக்குறுதி கொடுத்தது என்பதும் தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடதக்கது. தேர்தலுக்குப் பின்னர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு நீட் தேர்வுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தமிழகத்தில் நீட் தேர்வு இருக்காது என்றும் தமிழக அரசு கூறி வருகிறது.
மேலும் நீட்தேர்வு தாக்கம் குறித்து ஆய்வுசெய்ய ஏகே ராஜன் என்பவர் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இது குறித்து கருத்து கூறிய அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அவர்கள் நீட் தேர்வை தமிழக அரசால் 100% தடுக்க முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி இந்த தேர்வு நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.
நீட் தேர்வை தடுக்க முடியாது என்பது தமிழக அரசுக்கு நன்றாக தெரியும் என்றும் ஆனால் தேர்தலுக்கு முன் வாக்குறுதி கொடுத்து விட்டோமே என்பதற்காக அரசியல் செய்து வருகிறார்கள் என்றும் எனவே மாணவர்கள் தமிழக அரசின் பேச்சை நம்பிய குழப்பம் அடையாமல் நீட் தேர்வுக்கு தயாராகும் போது தான் நல்லது என்றும் அவர் கூறினார்.
பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டது போல் நீட் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது என ஏற்கனவே நான் கடந்த ஒரு மாதமாக கூறி வருகிறேன் என்றும் அரசியல்வாதிகளின் பேச்சை நம்பாமல் நீட் தேர்வுக்கு தயாராவது மாணவர்களின் கடமை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.