இந்தியா
இந்து கோவிலுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கி மத நல்லிணக்கத்திற்கு வித்திட்ட பாட்ஷா பாய்!
பெங்களூரூவில் இந்து கோவிலுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள இடத்தை தானமாக வழங்கி, மதநல்லினக்கத்துக்கு வித்திட்டுள்ளார் இஸ்லாமியர் ஒருவர்.
பெங்களூரு புறநகர் பகுதியில், ஓல்டு மெட்ராஸ் சாலையில் உள்ளது காடுகொடி பெலதூர். அங்கு வாடகை லாரி வணிகம் செய்து வருகிறார் எச்.எம்.பாட்ஷா.
இவருக்குப் பெங்களூருவிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒசகோட்டே பகுதியில், 3 ஏக்கர் நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்துக்கு அருகில் இருக்கும் ஒரு ஆஞ்சினேயர் கோவிலுக்கு நீண்ட காலமாகச் சென்று வர பாதை வசதி இல்லாமல் இருந்தது.
பாட்ஷா பாய் நிலம் கொடுத்தால், அந்த கோவிலுக்கு சென்ற வர வழி கிடைக்கும். எனவே பாட்ஷாவிடம் 1.5 செண்ட் நிலத்திற்குப் பணம் வழங்குவதாகவும், கோவில் சென்று வர பாதைக்கு உதவ வேண்டும் என்றும் பாட்ஷாவிடம் கேட்டுள்ளனர்.
உடனே அதற்கு ஒப்புக்கொண்ட பாட்ஷா, 1.5 செண்ட் இடத்தை கோவிலுக்கு தானமாக வழங்க முன்வந்துள்ளார். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அந்த இடத்தின் இன்றைய சந்தை மதிப்பு 1 கோடி ரூபாய்க்கு செல்லும் என்று கூறப்படுகிறது. பாட்ஷா பாய் எடுத்த முடிவை பார்த்த மக்கள் அவரை சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய பாட்ஷா, “இந்துக்கள், இஸ்லாமியர்கள் என்ற பாகுபாடு யாரிடமும் பார்க்கக் கூடாது. இப்படி பாகுபாடுகள் இருந்தால் நாடு முன்னேறுமா? சில அரசியல் தலைவர்கள் மக்களிடையே பிரிவை உண்டாக்கு சாதி, மத அரசியல் தலைவர்கள் மக்களிடையே பிரிவை உடாக்கி, சாதி, மத அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர். நாம் ஒற்றுமையாக இருந்தால் நாடு முன்னேறும். அதனால் நம் நாட்டை நேசிக்க வேண்டும் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் எனது நிலத்தை ஆஞ்சிநேயர் கோவிலுக்குத் தானமாக வழங்கினேன்” என்று தெரிவித்துள்ளார்.