தமிழ்நாடு
கட்சி தொடங்குற மாதிரி நாடகமாடுறாரா ரஜினி?- நிருபர் கேள்விக்கு கொதித்த கமல்
உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள போயஸ் தோட்ட இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிக்கு, ரத்த அழுத்தத்தில் அதீத ஏற்ற இறக்கம் இருந்த காரணத்தினால், ஐதராபாத்தில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு நேற்ற டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இப்படி டிஸ்சார்ஜ் ஆன ரஜினி, அடுத்த ஒரு வாரத்துக்கு முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனைத் தரப்பு அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, ‘டிசம்பர் 31 ஆம் தேதி, புதிய கட்சித் தொடங்குவது குறித்து அறிவிப்பேன்’ என்று ரஜினி கூறியிருந்தார். இந்நிலையில் உடல்நல பாதிப்பைக் கருத்தில் கொண்டு கட்சித் தொடங்கும் முடிவை ரஜினி கைவிடுவார் என்று சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழக அரசின் கீழ் இயங்கும் அத்தனை அமைப்புகளிலும் ஊழல் மலிந்திருப்பதாக குற்றம் சாட்டினார். பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்துக் காரியங்களிலும் ஊழல் புரையோடியிருப்பதாகவும் அவர் கூறினார்.
அப்போது ஒரு நிருபர், ‘ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக சொன்னார். தற்போது அதிலிருந்து பின்வாங்கி இருப்பதாக தெரிகிறது. அவர் கட்சித் தொடங்குவது போல நாடகமாடுகிறார் என்று சொல்லப்படுகிறதே, அது குறித்து உங்கள் கருத்து என்ன?’ என்றார். டக்கென்று நிருபரின் கேள்விக்கு ரியாக்ட் செய்த கமல், ‘நீங்கள் உத்தேசங்களாக நினைக்கும் கருத்துகளை என் வாயில் திணிக்காதீர்கள். ரஜினி என் நண்பர். அவரின் ஆரோக்கியத்தில்தான் எனக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. அவர் பரிபூலண உடல் நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என்பதில்தான் எனது எண்ணம் இருக்கிறது’ என்று பதில் அளித்தார்.