இந்தியா

மம்தா வெற்றி பெற்றாரா, இல்லையா..?- வதந்திகளுக்கு மத்தியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published

on

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்று காலை முதல் 8 கட்ட தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைத் தக்க வைத்த திரிணமுல், மூன்றாவது முறையும் வெற்றி பெறும் நோக்கில் தேர்தலை சந்தித்தது.

அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் வளர்ச்சி அடைந்துள்ள பாஜக, இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணத்தில் இருந்தது. அந்த எண்ணங்களை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தவிடுபொடியாக்கி உள்ளது.

மாலை 7 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி,190 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மொத்தம் 211 தொகுதிகளில் திரிணாமூலின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக, 77 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 3 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 3வது முறையும் மம்தா தலைமையிலான ஆட்சியே மேற்கு வங்கத்தில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் மேற்கு வங்க நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, அந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரியைவிட சில ஆயிரம் வாக்குகள் பின் தங்கியுள்ளார். மாலை 7 மணி நிலவரப்படி மம்தா, 52,815 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால் சுவேந்து அதிகாரி, 62,677 ஓட்டுகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

மம்தா பானர்ஜியை விட சுவேந்து அதிகாரி, 9,862 வாக்குகள் முன்னிவலை வகித்து வருவதாக தேர்தல் ஆணைய தளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மேற்கு வங்க வட்டத்தில் இருந்து வரும் தகவல்கள், மம்தா, 1,03,571 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருப்பதாகவும், சுவேந்து அதிகாரி, 1,02,751 ஓட்டுகள் பெற்று பின்னடைவைச் சந்தித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version