தமிழ்நாடு
நான் கடத்தப்படவில்லை, மனுவை வாபஸ் பெறுகிறேன்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!
அதிமுக வேட்பாளர் கடத்தப்பட்டதாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் நான் கடத்தப்படவில்லை என்றும் நான் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்றும் அதிமுக வேட்பாளர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்களை தாக்கல் செய்தனர் என்பதும், சமீபத்தில் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் என்றும் இதன்பின் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒரு சில வேட்பாளர்கள் கடத்தப்பட்டதாக புகார் வந்த நிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள அதிமுக வேட்பாளர் இந்திராணி என்பவர் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இதனை அடுத்து அதிமுக வேட்பாளர் இந்திராணி கடத்தப்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் வாடிப்பட்டி வேட்பாளர் இந்திராணி தான் கடத்தப்படவில்லை என்றும் தான் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.