கிரிக்கெட்
உயரும் கொரோனா: ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி – பிசிசிஐ தகவல்!
கிரிக்கெட் திருவிழா எனப்படும் ஐபிஎல் தொடர் வரும் 9 ஆம் தேதி, இந்தியாவில் தொடங்குகிறது. முதல் போட்டி சென்னை, சேப்பாக்கத்தில் இருக்கும் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டி மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ளது. தற்போது இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால், அனைத்து ஐபிஎல் போட்டிகளும் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ முன்னரே அறிவித்துவிட்டது.
குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் மும்பையில் கொரோனா பரவல் உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் மும்பையில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக அங்கு போட்டிகள் நடத்தப்படுமா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் பிசிசிஐ அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ‘கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்த்தால் பாதிப்பில் இருந்து வீரர்களை காக்க அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தான் ஒரே வழி என்று நினைக்கிறேன். வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என்று கிரிக்கெட் வாரியம் சிந்தித்தாலும் தற்போது தடுப்பூசி தேவை என நினைக்கிறது.
கொரோனா வைரஸ் பரவல் எப்போது முடிவுக்கு வரும் என்று யாருக்கும் தெரியாது. அதற்கு காலக்கெடுவும் வழங்க முடியாது. கொரோனா அச்சத்தை வைத்துக் கொண்டு வீரர்கள் சுதந்திரமாக விளையாட முடியாது. எனவே ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சக்கத்துடன் பேசி கிரிக்கெட் வாரியம் விரைவில் முடிவு எடுக்கும்’ என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் அதிக வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.