கிரிக்கெட்
IPL ஏலம் 2021: விற்காமல் விடுபட்ட முக்கிய வீரர்கள்!
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்க உள்ளது. இதையொட்டி ஐபிஎல் மினி ஏலம் இன்று சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு அணிகள் தங்களுக்கு விருப்பமான வீரர்களை ஏல முறையில் எடுத்துள்ளது.
இன்றைய ஏலத்துக்கு 1,097 வீரர்களில் இருந்து 292 பேர் தேர்வு செய்து ஏலப் பட்டியல் உருவாக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல்லை எடுக்க ஐபிஎல் அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அவரை ரூ.14 கோடிக்கு ஆர்சிபி அணி வாங்கியுள்ளது. அதேபோல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு வாங்கியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இது ஒருபுறம் இருக்க, இங்கிலாந்து வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேஸன் ராய், ஆஸ்திரேலிய வீரர்கள் அலெக்ஸ் கெரே, வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான், இலங்கை வீரர் குஷால் பெரேரா, சாம் பில்லிங்ஸ் ஆகியோரை ஏலத்தில் எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன்வரவில்லை. இந்த வீரர்கள் சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இதேபோன்று மோசமான ஆட்டத்தால் விமர்சிக்கப்பட்டு, சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கேதர் ஜாதவை எந்தவொரு அணியும் விலைக்கு வாங்கவில்லை. இவருக்கு அடிப்படை விலையாக ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்திய வீரர் ஹர்பாஜன் சிங் 2 கோடிக்கு ஏலம் விடப்பட்ட நிலையில் அவரையும் எந்த அணியும் வாங்கவில்லை. இதேபோன்று கடந்த சீசனில் ரூ.6.75 கோடி கொடுத்து சென்னை அணி வாங்கிய பியூஷ் சாவ்லாவை நடப்பு சீசனில் அனைத்து அணிகளும் புறக்கணித்துள்ளன.